வியாழன், 30 செப்டம்பர், 2010

பகிர்ந்துகொள்ளாத மாலை

சாம்பல் வெள்ளையாய்
மழை மூசாப்பு தொடங்கும்
அந்தியில் விகசிப்பது
என்னைச் சுற்றிக் குளிர் வலையை
விரித்துக்கொண்டேயிருப்பது
உன் உருவம்
வைக்கோற் கட்டுக்களை
அடைத்துக்கொண்ட மாட்டு வண்டிகள்
வரிசையாக
வயல் பாதையில் வருகின்றன
கறிவேப்பிலை பொரிந்த எண்ணெய் மணம் பரவச்
சிணுங்கும் மணிகளின் இசையோடு
மாலையின் ருசியைக் கூட்டுகிறான்
கடலை வியாபாரி
காற்றின் கிழிந்த ஓரங்களைத்
தைத்து முடிப்பதில்
அவசரம் காட்டுகின்றன
ஒரு சோடித் தும்பிகள்
நெருப்பு நிற மாலைக் கதிர்கள்
ஆற்றுநீர் மேற்பரப்பில்
மருதாணியிடுகின்றதா மயக்கத்தை
பதுங்கிவரும் வாடைக் காற்றின்
எதிர்பாராத தொடுதலில்
அதிர்ந்து சிலிர்க்கின்றன மஞ்சள் மலர்கள்
நான் கற்பனை செய்கின்றேன்
இத்தருணங்களில்
உன் இதமான நெருக்கத்தைப்
பருகாது ஆறிய தேநீரிடம்
நாம் பகிர்ந்துகொள்ளாத
இம்மாலைப் பொழுது தோல்வியைத்
தழுவுகின்றது.
~அனார்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக